மருத்துவர்களுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் திமுக அரசு : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 3:33 pm
Vanathi - Updatenews360
Quick Share

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66 வது வார்டு ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 16.90 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவு நீரை அகற்றுவதில் மிகப்பெரிய சிரமங்கள் இருந்ததாகவும் இதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு உடல்நலம் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருந்ததாகவும் இதனை சரி செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதியில் தங்கள் அளித்ததாக தெரிவித்தார்.

அதன்படி இன்று கழிவு நீரை அகற்றுவதற்கான பம்பிங் ஸ்டேஷன்(கழிவு நீரேற்று நிலையம்) இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது எனவும் பட்டா வசதியும் ஏற்படுத்தி தர வேண்டி உள்ளதாக தெரிவித்தார். பட்டா வசதி ஏற்படுத்தி தருகின்ற இடத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி வருவதாக தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர் இந்த ஆண்டு கரும்பிற்கு பதிலாக பணமாக கொடுத்து விடுவோம் என்று அமைச்சர் ஏவா வேலு கூறுகிறார்.

கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும், செய்கின்ற விஷயத்தை ஊழல் இல்லாமல் நேர்மையாக செய்யுங்கள் என்று தான் தாங்கள் கூறுவதாகவும் ஆனால் செய்யவே போவதில்லை என கூறுவது சரியல்ல எனவும் அப்படி பார்த்தால் சாலைகள் குறித்து பல்வேறு புகார்களை முன் வைத்தால் வெறும் குழிகளை மட்டும் அடைத்து விட்டு போய்விடுகிறார்கள் எனவும் அது ஒரு மழை பெய்தால் போய்விடுகிறது இதை சுட்டி காட்டினால் அதை மாற்றுவதில்லை என விமர்சித்தார்.

மேலும் தமிழகத்தில் மருந்து விநியோகம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது எனவும் மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை என தெரிவித்தார்.

மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தார்களை முதல்வரின் இல்லத்தில் இருக்கும் ஒருவர் அழைத்து தங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை விநியோகம் செய்ய முடியும் என பேசுவதாக விமர்சித்தார்.

மேலும் மருத்துவர்களுக்கு தாங்கள் கூற மருந்துகளை தான் எழுதி தர வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடும் அரசாக இந்த அரசு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இது போன்ற தவறுகளை சுட்டி காட்டினால் அதனை சரி செய்ய வேண்டிய அரசு அந்தத் திட்டத்தையே இல்லாமல் ஆக்குவதாகவும் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெறுவதாகவும் அப்படி என்றால் ஒவ்வொரு துறையிலும் வழங்க வேண்டிய உதவிகளுக்கு பதில் பணமாக கொடுத்து விடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழக முதல்வர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்ற குடும்ப ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுவாக வீடுகளில் தான் பாகம் பிரிப்பார்கள் என தெரிவித்த அவர் இங்கு மாநிலத்தின் முதல்வரின் குடும்பத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் துறைகளை பிரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இது குறித்து மாநில சுகாதாரத்துறையிடம் கோரிக்கை கொடுக்கிறோம் என தெரிவித்த அவர் இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கமும் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Views: - 348

0

0