மோடி என்ன பண்றாரு-னு அவருக்கே தெரியல… ஆனால், அது மட்டும் உறுதி ; அமைச்சர் துரைமுருகன் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
4 September 2023, 9:24 pm
Quick Share

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால் பலன் இல்லை என்றும், அதற்கு சட்ட சிக்கல் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் வரும் 17ஆம் தேதி திமுகவின் பவள விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக நிறுவனத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அவர்கள் தலைமையில் மேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் துரைமுருகன் :- மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சியை நடத்தப் போகிறாரா ? அமெரிக்காவைப் போல் பிரசிடெண்ட் அரசை கொண்டு வரப் போகிறாரா ? தேர்தலை உடனே கொண்டு வரப் போகிறாரா ? அல்லது தள்ளி வைக்கிறாரா ? என்று தெரியவில்லை. திடீரென்று கூட்டத்தை கூட்டியுள்ளார்.

ஆனால் அது மட்டும் ஒன்று தெரிகிறது விரைவில் தேர்தல் வரவுள்ளது. சட்டமன்றத் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் சேர்ந்து வருமா என்பதுதான் கேள்விக்குறி. நாம் சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து வருவதாக நினைத்து கொண்டு பணியாற்ற வேண்டும், என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் :- திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டுதோறும் கொண்டாடுகிற முப்பெரும் விழா இரண்டையும் இணைத்து ஒருபெரும் விழாவாக வேலூரில் நடத்த வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். நாங்கள் அதை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். மாநாடுகளை நடத்துவதிலும், ஊர்வலங்கள் நடத்துவதிலும் வேலூர் மாவட்டம் என்றும் சளைத்தது அல்ல. எனவே மாற்றாரும் பாராட்டும் வகையில் இந்த பவள விழாவை நாங்கள் நடத்தி காட்டுவோம், எனக் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கூட்டம் கூட்டி உள்ளதாக கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- கூட்டம் கூட்டி உள்ளதாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். ஆனால் இன்னும் சரியாக தெரியவில்லை. அப்படி இருந்தால் அதற்கு பலன் இல்லை. சட்ட சிக்கல்கள் உண்டு. எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே அதைப் பற்றி தெரியவில்லை, என்றார்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்த அதிமுக தற்போது ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், அவர்கள் எப்போதுமே அவர்களிடம் கூட்டணிக்கு போகிறவர்கள். கொஞ்ச நாள் பொறுத்து போகிறவர்கள். ஆனால் இப்போதே போகிறார்கள். கர்நாடகா மாநில அணையில் இருந்து தமிழகத்திற்கு 5000 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளோம். வரும் ஆறாம் தேதி வழக்கு வரவுள்ளது.

பாஜகவினர் தொடர்ந்து எங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, எனக் கூறினார்.

தமிழகத்தில் சாலைகள் புனரமைக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் தான் தற்பொழுது மோசமான நிலைமையில் உள்ளது, என்று பதிலளித்தார்.

Views: - 266

0

0