பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; திமுக எம்பியின் பேச்சால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 9:51 pm
Quick Share

விருதுநகர் – ராஜபாளையம் பகுதியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் உள்ளதாக தென்காசி திமுக எம்பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் பாலின வள மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் (திமுக) தனுஷ் M குமார், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் சிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலின மையத்தை திறந்து வைத்தனர்.

பெண்கள் பணிபுரியக்கூடிய இடத்தில் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றால், அவர்களுக்கு உடனடியாக தங்களுக்கு தேவையான இடத்தை உடனடியாக நாடிச் செல்ல முடியாத சூழலில் இதுபோன்ற மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

மேலும், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு விருதுநகரில் ஒரு மையம் ஒன்று உள்ளது அடுத்தபடியாக இராஜபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இதை தொடர்ந்து, பேசிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார், பெண்களுக்கு பாலியல் ரீதியான வன்கொடுமைகள் இராஜபாளையம் பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த மையம் திறப்பது நமக்கு பெருமை அல்ல வருத்தம் தான் அளிக்கிறது. தமிழக அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மையங்கள் திறப்பதற்கு அவசியமில்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பேசினார்.

Views: - 270

0

0