2024 தேர்தலில் தனித்து போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் : அமைச்சரின் பேச்சால் கடுப்பில் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு புதிய தலைவலி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 9:54 am
CM Stalin - Updatenews360
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து வந்தாலும் தி.மு.க.வால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோதும் வெற்றி பெற்றோம்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பின்னரும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். எனவே 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். இப்படி அவர்கள் (எதிர்க்கட்சிகள்) வெற்றி பெற்று இருக்கிறார்களா?.

இந்த வெற்றி இதோடு நிற்காது. இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும், சிந்தனையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். தனித்து நிற்க தயார் தனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உழைத்துகொண்டிருக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது.

இப்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள். இந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள்.

வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை நான் ஏதோ மேடை பேச்சுக்காக சொல்லவில்லை.

நான் உறுதியாக சொல்கிறேன் 20 ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்தான் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

இவரது இந்த பேச்சு கூட்டணி கட்சிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பின், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என அதிகரித்துள்ள நிலையில் மக்கள் திமுகவை நம்பியுள்ளார்கள் என அவர் பேசியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Views: - 367

0

0