காலை 7 மணிக்கே பணிக்கு வரச்சொல்லி கட்டயாப்படுத்தக்கூடாது : 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் முற்றுகை!!
Author: Udayachandran RadhaKrishnan25 ஏப்ரல் 2022, 4:36 மணி
ஈரோடு : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4000-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை.
சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
எம்.ஜி.என் ரேகா தொழிலாளர்களான (100 நாள் வேலை தொழிலாளர்கள்) தங்களை காலை 7.00 மணிக்கு பணிக்கு வரச்சொல்லி கட்டாய படுத்துவதாகவும், இது சட்டம் நிர்ணயித்துள்ள வேலை நேர அளவை மீறுவதாக உள்ளதாகவும், சட்டவிரோதமாக வேலை நேரத்தை அதிகப்படுத்துவது நியாயமாகாது என்றும், இந்த முறையை உடனடியாக கைவிட்டு ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி காலை 9.00 மணிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வரும் பழக்கத்தை தொடர வேண்டும் என்றும், தங்களது தினக்கூலியை 400 ரூபாயாக கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனவும், நிபந்தனையற்ற புதிய வேலை அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும், புதிய ஊதிய உயர்வு 8.00 ரூபாய் என்பதை ரத்து செய்து கூலி உயர்வை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல். சுந்தரம், எம்.ஜி.என் ரேகா தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா. பெரியசாமி ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினார்கள்.
0
0