திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்ட கமல்… சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமை.. பயப்படும் நடிகர் ரஜினிகாந்த் ; செல்லூர் ராஜு விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 1:59 pm
Quick Share

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எப்போதும் போல் ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முழு வீச்சில் பணியாற்ற வியூகங்கள் குறித்து பேசினார். தென் மாவட்டங்களில் எப்போதுமே அதிமுக ஆதரவு தான். சிறுபான்மையினர் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டதில் ஆதரவு அதிகம் உள்ளது.

கூட்டணி அமைப்போம் என்று பொதுச் செயலாளர் சொல்லி உள்ளார். வரலாற்றை மறைக்க கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவுக்குப் பிறகு, யார் தலைவராவது என்று பேச்சு வந்த போது எல்லாரும் நாவலர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்று சொன்ன போது, எம்ஜிஆர் தான் டாக்டர் கலைஞர் வர வேண்டும் என்று சொன்னவர்.

நடிகர் எஸ்எஸ்ஆர் எல்லாம் சந்தித்து பேசி அடிப்படை மக்களின் தேவையை நிறைவேற்றுபவர் என்று டாக்டர் கலைஞரை தேர்வு செய்தனர். இதனை எங்கள் தங்கம் படத்தில் அவரே பேசி உள்ளார். முரசொலி மாறன் கூட எம்ஜிஆர் இல்லை என்றால் எங்கள் குடும்பத்தினர் தெருவுக்கு வந்து இருப்போம் என்று தெரிவித்தார்.

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று வரலாற்றை மாற்றி ரஜினி, கமல் பேசியது வருத்தம். கமல் விக்ரம் படத்திற்கு பிறகு திமுகவுக்கு வாயை வாடகைக்கு விட்டு விட்டார். ஆனால் எப்போதும் நியாமாக பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்படி பேசிவிட்டார் என்பது வருத்தம்.

வள்ளலுக்கு எல்லாம் வள்ளல், திராவிட கர்ணன் என எம்ஜிஆருக்கு பெயர்சூட்டியவர் கருணாநிதி. ஆனால் ரஜினிகாந்தும் தவறாக, எம்ஜிஆரின் வரலாற்றை மறைத்து பேசியது தவறு. நேர்மையாக பேசும் ரஜினி அப்படிப் பேசியது வருத்தம் தருகிறது. நாங்கள் ரஜினி இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ஆட்சிக்கு பயந்து தனது சிவாஜி படத்திற்கு ஏற்பட்டதுபோல், பாதிப்பு இனிவரும் படங்களுக்கு வந்து விடக்கூடாது என பயந்து ரஜினி இப்படி பேசியுள்ளார், எனக் கூறினார்.

Views: - 191

0

0