சொத்தை அபகரித்து விட்டு விரட்டியடிப்பு… 6 பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்று சாலையில் கிடந்த முதியவர் ; ஆதரவுக்கரம் நீட்டிய பொதுமக்கள்..!!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 12:41 pm
Quick Share

சொத்துக்களை அபகரித்து விட்டு கடும் குளிரில் உடலில் படுகாயங்களுடன் நடுத்தெருவில் முதியவரை அவரது பிள்ளைகள் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (85) என்ற முதியவரை நேற்று மாலை உறவினர்கள் ஆட்டோவில் அழைத்து வந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், விசாரித்ததில் அவருக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதும், அவரது சொந்த ஊர் நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

சொத்து பிரச்சனையில் அவரது அனைத்து சொத்துக்களையும் பிள்ளைகள் 3 ஏக்கர் நிலம் மற்றும் நகைகளை எழுதி வாங்கிவிட்டு ஆதரவற்ற நிலையில் சாலையில் விட்டு விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடுங்கும் மார்கழி மாத குளிரில் தவித்தவருக்கு அங்கிருந்தவர்கள் உணவளித்து போர்வையும் வழங்கியுள்ளனர்.

அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நேற்று காலை வரை அவரை மீட்க எந்த பிள்ளைகளும், கருத்து வேறுபாடு காரணமாக முன் வராததால், அப்பகுதி மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், இருவருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் உறவினர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில், ஆட்சியர் கவனத்திற்கு இந்த சம்பவம் சென்றதால் மீண்டும் முதியவரை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

சொத்துக்களை அபகரித்து பெற்ற தந்தையை ஆதரவற்ற நிலையில் விட்டு செல்லும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.

Views: - 242

0

0