தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்ற ஆசாமி… திடீரென அலறிய பெண் ; சிசிடிவி காட்சிகளை வைத்து 2 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 12:53 pm
Quick Share

தோஷம் கழிப்பதாக கூறி கோவிலுக்கு அழைத்துச் சென்று பெண்ணிடம் நூதன முறையில் தங்க தாலி சரடை திருடிய ஆசாமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருணா (26) என்ற பெண் ஆம்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு, குடியாத்தத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது, அவருக்கு அருகில் அமர்ந்த ஆசாமி, “உங்கள் தந்தை தனக்கு நண்பர். அவருக்கு தோஷம் உள்ளது. அதை கழிக்க வேண்டும். இல்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்,” எனக் கூறி குடியாத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அருணா அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலிச்சரடை கழட்டி தரும்படி கூறியுள்ளார். மேலும், அதனை வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறி அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அதிர்ச்சி அடைந்த அருணா இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவன் சேலம் மாவட்டத்தில் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டு சேலம் சிறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிறையில் இருந்து போலீஸ் காவலுக்கு எடுத்து வந்த குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தான் கொள்ளையடித்த நகைகளை ஆம்பூர் பகுதியில் உள்ள தனது கூட்டாளி தண்டபாணி என்பவர் மூலம் விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து சுரேஷ்குமார் மற்றும் தண்டபாணி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 1/2 சவரன் (36 கிராம்) தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 633

0

0