வரலாற்றில் முதன்முறையாக கோவில் வளாகத்தில் நடந்த பழனி தைப்பூச தேரோட்டம் : அறுபடை வீட்டில் ஒலிக்காத அரோகரா!!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2022, 6:39 pm
திண்டுக்கல் : பழனியில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கோவில் வளாகத்திற்குள்ளேயே தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 12ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு கடந்த 14ஆம் தேதி முதல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில் ஏழாம் நாள் திருவிழாவான இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூச தேரோட்டமானது வழக்கமாக கட்டைத்தேரில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானை சமேதராக எழுந்தருளி கோவில் வளாகத்திலேயே வலம் வந்து நிறைவடைந்தது.
பழனி தைப்பூசத் திருவிழாவின் வரலாற்றிலேயே முதன்முதலாக தைப்பூசத் தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0
0