தமிழக அரசின் பட்ஜெட்டில் ஏமாற்றம்… 28ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் ; அரசு ஊழியர்கள் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
22 March 2023, 9:09 am
Quick Share

தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு எந்த வித அறிவிப்பும் இடம் பெறாமல் ஏமாற்றப்பட்டதாக அரசு ஊழியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூட்ட மண்டல பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் காந்திமதி,செயலாளர் வெள்ளத்துரை மற்றும் கந்தசாமி, மாரிமுத்துகுமார், வேலு, காட்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டமாக வரும் 28ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட இருப்பதாகவும், அடுத்த மாதம் 19ஆம் தேதி கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விட இருப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் பேட்டியளித்த கந்தசாமி தெரிவித்தார்.

Views: - 285

0

0