இப்படித்தான் ரெண்டு மாநில பிரச்சனைகளை சமாளிக்கிறேன் ; மாணவர்கள் மத்தியில் ரகசியத்தை உடைத்த ஆளுநர் தமிழிசை…!

Author: Babu Lakshmanan
19 April 2023, 9:50 pm
Quick Share

புதுச்சேரி ; தினமும் யோகா செய்வதால் தான் ஆளுநராக தன்னால் இரண்டு மாநிலங்களை சமாளிக்க முடிகிறது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

பிரம்மா குமாரிகள் சமூக மற்றும் ஆன்மீக தொண்டு நிறுவனத்தின் இளைஞர் பிரிவு மற்றும் மதர் தெரசா சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் Y-20 புதுச்சேரி 2023 துவக்க நிகழ்ச்சி மதர் தெரசா கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒய். 20 நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆரோக்கியம், நல்வாழ்வு, விளையாட்டு” இத்திட்டத்தின்கீழ் அனைவரின் தன்னம்பிக்கை மற்றும் அவரவர் திறமைகளை மேம்படுத்தும் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

தொடர்ந்து விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது :- இளைஞர்கள் பாதையை சரியாக தேர்ந்தெடுங்கள். போதைக்கு அடிமையாகி விடாதீர்கள். உடல் ரீதியாக இல்லாமல் மன ரீதியாக தனக்கு இருபது வயது தான் நான் நினைக்கிறேன். தளராத மனமும் குறையாத வயது இருந்தால்தான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும், என்றார்.

செல்போனின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இளைஞர்கள் வெளியே வரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், உணவு சாப்பிட கூட நேரமில்லாமல் பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். படித்து கற்றுக் கொள்வது மட்டுமே முக்கியமல்ல கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும், நாம் இளமையாகவும், மன வலிமையோடு இருக்க வேண்டும் என்றால் யோகா செய்ய வேண்டும், என்று கூறினார்.

நான் ஒரு மருத்துவர். இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக உள்ளேன். ஆனால், தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன் என்று குறிப்பிட்ட தமிழிசை சௌந்தரராஜன், அதனால்தான் இரண்டு மாநிலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தன்னால் சமாளிக்க முடிகிறது, என்றார்.

தன்னம்பிக்கை இருக்கும்போது இளைஞர்கள் யாரும் தற்கொலையை பற்றி சிந்திக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அவர், என்னை எந்த அளவுக்கு விமர்சனம் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு தான் பலம் பெற்று வருவதாக குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மதர் தெரசா கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது :- அரசு அனுப்பும் கோப்புகள் மீது முடிவெடுக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டுமோ, அவ்வளவு கால அவகாசத்தை ஆளுநர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், தற்போது ஆளுங்கட்சியாக உள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக இருந்து இருப்பார்கள். அவர்களும் ஆளுநரை சந்திப்பார்கள். எனவே, ஒரு கோப்புகள் மீது தெளிவான முடிவை எடுக்க பொதுமக்களின் கருத்து மற்றும் எதிர்க்கட்சியின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க கால அவகாசம் தேவை. கடிதம் எழுதுவது என்பது முதல்வர்களின் கடமை, என்றும் குறிப்பிட்டார்.

Views: - 669

0

0