சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தப்பிக்க உதவியா..? ஐஜி பொன்மாணிக்கவேல் மீதான நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு

Author: Babu Lakshmanan
22 July 2022, 7:32 pm
Quick Share

குமரி : தமிழக சிலை கடத்தல் வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக போலீஸ் அதிகாரிகளை பழி வாங்கியதாக ஐஜி பொன்மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி காதர் பாஷாவின் வழக்கறிஞர் இன்ஃபான்ட் தினேஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷாவின் வழக்கறிஞர் இன்ஃபான்ட் தினேஷ் நாகர்கோவில் நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக பொன்மாணிக்கவேல் கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 21 ஆம் ஆண்டு வரை நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி ஆக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சிலை கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான சுபாஷ் கபூர் தீனதயாளன் ஆகியோரை தப்பிக்க வைப்பதற்காக ஐஜி பொன்மாணிக்கவேல் பல குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாகவும், இதனால் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நேர்மையாக பணியாற்றிய காதர் பாட்ஷா டிஎஸ்பி போன்ற அதிகாரிகள் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டு வழக்குகளை சந்தித்தனர்.

எனவே, பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அப்போதைய ஐஜி பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், இந்த விசாரணையை டிஐஜி பொறுப்பிற்கு மேல் உள்ள அதிகாரிகள் விசாராணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 884

0

0