ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 12:54 pm
Ma Su
Quick Share

ரூ.4,000 கோடி செலவு பற்றி விவாதிக்க நான் தயார்.. மழை பாதிப்புகளில் அரசியல் செய்யாதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தொடர்ந்து வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் நடைபெற்ற மழைக்கால மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் 3000 க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 679 இடங்களில் நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில் சென்னையில் 679 இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும் காஞ்சிபுரத்தில் 100 இடங்களிலும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாமின் மூலம் மழைக்கால நோயான மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்த்து மருத்து கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளில் 160 மருத்துவ வாகனம் மூலம் 2147 நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன் மூலம் 1,69,421 பேர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 867 பேருக்கு காய்ச்சல் பாதிப்பும் 13,372 பேருக்கு இருமல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 6 வாரம் மருத்துவ முகாம் நடைபெற்று இருக்கிறது. இந்த வாரம் ஏழாவது வாரமாக மருத்துவ முகாம் நடைபெறுகிறது, இன்னும் 3 வாரம் நடைபெற உள்ளது. கடந்த 6 வாரமாக 13,734 மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதன் மூலம் 6,50,585 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொது மக்கள் காய்ச்சிய குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குடிநீரில் உள்ள குளோரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும், தட்டமை தடுப்பூசியை 9 மாதம் நிறைவு பெற்ற குழந்தைகள் முதல் 15 வயது உள்ளவர்கள் வரை தட்டமை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கூறினார்.

மக்கள் கோபமா ?? மா.சு.விளக்கம்

மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் மக்களை சந்தித்தோம் ஆனால் மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்த காரணம் அதிமுக போன்ற கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தி அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது வேண்டும் என்று விமர்சனம் செய்பவர்கள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும். வேலை செய்பவர்களின் மனசை கஷ்டப்படுத்தக் கூடாது என்றார்.

அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம், சென்னையில் 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். என்னோடு வாருங்கள் பணிகளை நேரில் காட்டுகிறேன். அரசியல் கட்சிகள் யாராக வந்தாலும் நான் நேரடியாக விவாதிக்க தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Views: - 171

0

0