‘பல்’வீர்சிங்குக்கு எதிராக களமிறங்கிய ஐஏஎஸ் அமுதா : தொடங்கியது 6 மணி நேர விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 11:56 am
Amutha 1 - Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் தனது எல்கைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார்.

அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டுக்குழு விசாரணை அதிகாரி ஐஏஎஸ் அமுதா நேற்று நெல்லை வந்து மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரி ஆர்டிஓ ஆகியவரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு பல் பிடுங்கப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களிடம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை செய்ய உள்ளார்.

Views: - 325

0

0