‘குவாட்டரா..? கட்டிங்கா..?’… அதிகாலையிலேயே கள்ளத்தனமாக மதுவிற்பனை படுஜோர்… நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 1:29 pm
Quick Share

சிவகங்கை ; சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடை வாசலிலேயே கடை திறப்பதற்கு முன்னதாகவே, அதிகாலையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசிற்கு சொந்தமான 7514 என்கிற எண் கொண்ட மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு மதுவிற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே மதுபான கடைகளை திறக்க அனுமதியளித்து வருகிறது.

இந்நிலையில், கடை அடைக்கப்பட்டிருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர் கடைகள் திறந்திருக்கும்போதே மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு, கடை அடைக்கப்பட்டிருக்கும்போது, லாப நோக்குடன் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

அதுபோல் விற்பனை செய்யும் நபர் ஒருவர் அதிகாலையிலேயே மதுக்கடை அருகேவுள்ள பூட்டிய பெட்டிக்கடை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து மேற்கூரையில் மறைத்து வைத்து மதுப்பிரியர்களிடம் விற்பனை செய்யும் வீடியோ தற்சமயம் சிவகங்கை பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய மதுவிலக்கு காவல்துறையினர், இதுபோல் பட்டப்பகலிலேயே பேருந்து நிலையம் அருகிலேயே நடைபெறும் கள்ள மது விற்பனையை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Views: - 243

0

0