இன்ஸ்டாவில் பழக்கம்… 16 வயது சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய இளைஞர் ; போக்சோவில் கைது..!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 11:22 am
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இன்ஸ்டா காதலியான தையல் பயிற்சி மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நங்கன்விளை கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக் (19). இவர் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படித்து முடித்து விட்டு, ஒசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி தற்போது கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருவதோடு, நாகர்கோவிலில் உள்ள தையல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாவில் பழக்கமான இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால், உறவினர்கள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில் அபிஷேக் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று ஒசூரில் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு சென்று மாணவியை மீட்ட குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், அபிஷேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 576

0

0