ஜெயலலிதாவிடம் 40 ஆண்டுகாலம் உதவியாளராக இருந்த ராஜம்மாள் காலமானார்: ஓபிஎஸ்-இபிஎஸ் இரங்கல்..!!

Author: Rajesh
26 March 2022, 10:34 pm
Quick Share

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ராஜம்மாள் காலமானார். ஈபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர் ராஜம்மாள். உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளராகவும், நம்பிக்கைக்குரிய தோழமையாகவும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் தோட்டம் வேதா நிலையத்திலேயே தங்கி பணிவிடைபுரிந்த பாசத்துக்குரிய ராஜம்மாள், முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.

ராஜம்மாள் ஒரு தாயின் பரிவுடனும், பாசத்துடனும் தன்னை நேசித்து, போற்றி, பாதுகாப்பதாக பலமுறை ஜெயலலிதா நெகிழ்ந்து கூறியிருப்பதை கட்சியினரும், ஜெயலலிதாவை அறிந்தவர்களும் நினைவில் கொண்டிருக்கிறோம்.

கனிவும், பணிவும் கொண்ட ராஜம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாசத்துக்குரிய ராஜம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 650

0

0