கொஞ்சம் கொஞ்சமா திருடினா தெரியாதா?: அடகு வைத்த நகைகளை வெட்டி அபேஸ் செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!!

Author: Rajesh
17 March 2022, 3:28 pm
Quick Share

திருப்பூர்: பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக சுதா என்பவரும் நகை மதிப்பீட்டாளராக சேகர் என்பவரும் பணி புரிந்து வருகின்றனர். இந்த வங்கியில் கேத்தனூர், மந்திரிபாளையம், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகளை தொடங்கி வாடிக்கையாளராக உள்ளனர்.

விவசாயிகள் அவசர தேவைக்காக தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைப்பது வழக்கம். அவ்வாறு நகைகளை அடமானம் வைக்கும் பொழுது நகை மதிப்பீட்டாளர் சேகர் சிட்டா மற்றும் ஆதார் கார்டின் நகல் வழங்கினால் குறைந்த வட்டியில் நகை கடன் கிடைக்கும் என கூறியதை நம்பிய விவசாயிகள் அவரிடம் நகையை கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.

தொடர்ச்சியாக இது நடைபெற்று வந்த சூழ்நிலையில் அடகு நகையை மீட்ட சிலர் நகையின் அளவுகள் மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகையின் எடையை பரிசோதனை செய்தததில் வாங்கும் போது இருந்த நகையின் எடையும் அடகு வைத்து மீட்கப்பட்ட பின் இருந்த நகையின் எடையும் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு வங்கியை முற்றுகையிட்டு வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கிருந்த நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொதுமக்கள் விசாரித்த போது தவறை ஒப்பு கொண்டுள்ளார். மேலும், திருகாணி போன்ற சிறுபாகங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தொடர்ந்து புகார் அளித்த நிலையில் வங்கி நிர்வாகத்தின் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை இன்று போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 696

0

0