‘கர்ப்பமாயிட்டேன், கல்யாணம் பண்ணிக்கோ’… இளம்பெண் காணாமல் போன சம்பவத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 12:36 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே இளம்பெண் மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏலக்காய் மங்கலம் பகுதியில் வசிப்பவர் விமலாமேரி. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா மேரியின் கணவர் அமல்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜெனிதா மேரி என்ற மூத்த மகளும், அஜித் என்ற இரண்டாவது மகனும், ஷீபா என்ற 24 வயதுடைய டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெண்ணும் உள்ளனர்.

ஷீபா குண்ணவாக்கம் பகுதியில் உள்ள SADC என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஷீபா கடந்த 24ம் தேதி காலை 9 மணிக்கு வீட்டைவிட்டு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இது சம்பந்தமாக ஷீபாவின் அண்ணன் அஜித் கம்பெனிக்கு சென்று கேட்டதற்கு மதியம் 1.34 மணியளவில் நிறுவனத்தில் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

சந்தேகம் அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ஷீபா எங்கும் கிடைக்கவில்லை. அதனால், ஷீபாவின் உறவினர்கள் காணாமல் போன ஷீபாவை கண்டுபிடித்து தருமாறு 24ம் தேதி இரவு 10 மணியளவில் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட எந்த காவலர்களும் புகார் மனுவை வாங்காமல் இவர்களை விரட்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 25ந் தேதி (நேற்று) மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று ஷீபாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். மேற்படி புகாரை பகல் 12.00 மணிக்கு பெற்று கொண்டு குற்ற எண். 249/2023 u/s Woman Missing ல் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நீங்களும் தேடுங்கள் நாங்களும் முயற்சிக்கின்றோம் என மேலோட்டமாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த ஷீபாவின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் ஏலக்காய் மங்கலத்தில் இருந்து வேன் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்க சென்றனர். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இல்லாத காரணத்தினால் இரவு 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அவர்களை சந்தித்து காவல்துறையினர் நடந்து கொண்ட விதத்தை பற்றி கூறி, எங்கள் பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என மன்றாடி உள்ளனர்.

அதனை அடுத்து, நேற்று மதியம் ஷீபாவின் காதலனான பண்ருட்டி பகுதியை சேர்ந்த சாமுவேல் (வயது 26) என்ற நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில், ஷீபாவும் சாமுவேலும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வருவதாகவும், தன்னை கல்யாணம் செய்து கொள்ள ஷீபா வற்புறுத்தி நான் கர்ப்பமாக உள்ளேன் எனக் கூறியதாகவும், அதனால் தன்னுடைய காரில் ஷீபாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் ஷீபா கருத்தரிக்க வில்லை என உறுதியானதால் ஆவேசமடைந்த சாமுவேல் குண்ணம் அடுத்த அயிமசேரி பகுதியில் காரில் வைத்து ஷீபாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை கொவளவேடு ஏரியில் உள்ள மதகில் போட்டு விட்டு வந்து விட்டேன் என சாமுவேல் கூறியுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

அதனை அடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் சாமுவேல் காண்பித்த இடத்தில் உள்ள மதகில் ஷீபாவின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு ஓரகடம் , வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்களும் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி போன்ற அதிகாரிகளும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக ஷீபாவின் உறவினர்கள் கூறும் போது, சாமுவேல் மட்டுமே இந்த படுகொலையை செய்திருக்க வாய்ப்பில்லை. அவனுடன் சேர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகப்படுகின்றோம். எனவே இதற்கு முறையான விசாரணை செய்ய வேண்டும். அதேபோல் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வாங்காத காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் ஷீபாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என ஆவேசமாக கூறினார்.

காவல்துறையினர் ஷீபாவின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

Views: - 609

0

1