வங்கி அதிகாரி எனக் கூறி வந்த போன் கால்… பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.24 லட்சம் மாயம்…!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 6:08 pm
Quick Share

கரூரில் அரசு பள்ளி ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நூதனமான முறையில் மோசடி கையாடல் செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (52). கரூர் அடுத்த தாளியாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக கலைமணி பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 11 ம் தேதி அன்று வங்கி அதிகாரி என்ற பெயரில், மர்ம நபர் ஒருவர் இவருக்கு போன் செய்துள்ளார்.

சந்தேகம் அடைந்த ஆசிரியர் கலைமணி இணைப்பை துண்டித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வந்த வங்கி தொடர்பான போலியான லிங்கை அவரது மகள் கிளிக் செய்து ஆசிரியரின் வங்கி பதிவு செல்போன் எண்ணுக்கு வந்த OTP எண்ணை பதிவிட்டுள்ளார்.

5 நாட்களுக்கு பிறகு ஆசிரியர் தனது வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்ற ஆசிரியர் கலைமணி பார்த்தபோது ரூபாய் 3 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வங்கிக் கணக்கில் ரூபாய் 24,000 எடுக்கப்பட்டுள்ளது மொத்தமாக அவரது வங்கி கணக்கில் ரூபாய் 3 லட்சத்து 24,000 ரூபாய் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கலைமணி கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 714

0

0