மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம்.. முதல் நாளிலேயே திரண்டு சுற்றுலாப் பயணிகள்…!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 2:06 pm
Quick Share

கோவை: நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் தனி வாகனத்தில் அழைத்து செல்லப்படுவார்கள். அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை குற்றாலத்தில் அவ்வப்போது வெள்ள பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண்காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற்றலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும்.

கடந்த சில மாதங்களாக கோவை குற்றாலத்தில் அவ்வபோது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால், அருவியில் வெள்ள பெருக்கு ஏற்படும் போது எல்லாம் சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த ஜூலை மாதம் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனை அடுத்து நேற்று (27-ந் தேதி) முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10 மணிக்கு அனுமதிச் சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும். இந்நிலையில் நேற்று கோவை குற்றலாத்தில் 375 பெரியவர்களும், 30 குழந்தைகளும் என மொத்தம், 405 சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Views: - 387

0

0