குரூப் 1 தேர்வுக்கு வர தாமதம்… அனுமதி மறுப்பால் தேர்வர்கள் விரக்தி ; ஹால் டிக்கெட்டுக்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 2:12 pm
Quick Share

காஞ்சிபுரம் ; குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 18 துணை ஆட்சியா், 26 துணைக் காவல் கண்காணிப்பாளா், 13 வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

group 1 exam - updatenews360

இதற்கென 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். 9 மணிக்கெல்லாம் தேர்வு மையத்தில் தேர்வர்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்த நிலையில், இந்த குரூப்-1 தேர்வினை எழுத பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

group 1 exam - updatenews360

தேர்வுக்கு தாமதமாக‌ வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அந்த தேர்வு மையத்தின் வாயிலில் உள்ள அலுவலர்களிடம் மன்றாடி பார்த்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹாளல் டிக்கெட்களை சிலர் கிழித்தெறிந்தனர். மேலும், ஒரு சில தேர்வர்களும், அவர்களது பெற்றோர்களும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

group 1 exam - updatenews360

பொறுப்புள்ள பதவிக்கு தேர்வு எழுத வருகிறவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு மையத்துக்கு வந்தால் தான், பிற்காலத்தில் இவர்கள் பதவியில் அமரும் போது, ஒழுக்க நிலையை கடைப்பிடிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 515

0

0