மதுரை துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்… இருவர் கைது … திமுக பிரமுகர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
11 January 2024, 1:02 pm
Quick Share

மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் நாகராஜ். இவர் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள நேதாஜி தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு ரவுடிகள் இருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேபோல, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள அவரது அலுவலகம் முன்பும் இதே ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு, அலுவலக கண்ணாடியை உடைத்து விட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, அங்கு இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். அதன்பேரில், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் துணை மேயர் நாகராஜன் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் 80வது வார்டு திமுக வட்ட செயலாளர் கண்ணன், துணை வட்ட செயலாளர் முத்து வேல் உள்ளிட்ட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 257

0

0