முறைத்து பார்த்ததாகக் கூறி பாத்திர வியாபாரி கத்தியால் குத்திக்கொலை : 24 மணிநேரத்தில் 10 பேர் கைது..!!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 10:35 am
Quick Share

முறைத்துப் பார்த்ததாக கூறி பாத்திர வியாபாரியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் கனகராஜ் (வயது 53). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகச் சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜ்க்கும் வீட்டின் கூரையில் உள்ள வாரியில் மழைநீர் விழுவதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை அடிக்கடி நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது, கனகராஜ் கலைவாணன் மகன் விஷ்வாவை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கனகராஜ் அவரது உறவினர் குருசாமி என்பவர் வீட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது, விஷ்வா, அவரது சகோதரர் ஜெயக்குமார் உள்ளிட்ட எட்டு பேர் குருசாமி வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி கனகராஜை கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளனர்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

மேலும், தடுக்க வந்த கனகராஜ் மகன் ஆனந்த் மற்றும் குருசாமி ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்த ஆனந்த் குருசாமி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இச்சம்பவம் பற்றி அறிந்த பேரளம் போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மேலும் இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்வா, ஜெயக்குமார் உள்ளிட்ட 8 பேரை வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது விஷ்வா (22), ஜெயக்குமார் (30), சூர்யா (25), கலைவாணன் (60), சுரேஷ் (40), அரவிந்தன் (27), சுப்பிரமணியன் (44), அசோக் குமார் (27), பிரகாஷ் (40), விஜய் (20) ஆகியோரை பேரிலும் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Views: - 294

0

0