மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்… நாகர்கோவிலில் தாக்குதல் நடத்த நிகழ்த்த திட்டமா..?
Author: Babu Lakshmanan28 நவம்பர் 2022, 9:26 மணி
மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் லாட்ஜில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரூ மாவட்டத்தில் கடந்த 19 ம் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என தெரிய வந்தது. ஆட்டோவில் சென்றவன் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் (22) என போலீசார் கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கினர். ஷாரிக்கின் செல்போன் மற்றும் டைரி போன்றவற்றை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அந்த வகையில், கோவை, மதுரை, நாகர்கோவில் என பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சென்று அந்த ஊர்களில் போலி ஆவணம் மூலம் அறை எடுத்து தங்கி உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் மங்களூரூ போலீசார் இன்று நாகர்கோவில் வந்தனர். அவர்கள் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு சம்பவம் தொடர்புடைய முகமது ஷாரிக், பிரேம் ராஜ் என்ற பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து தங்கி இருந்த தகவல் கிடைத்துள்ளது.
8-9-2022 முதல் 12-9-2022 வரை நாகர்கோவிலில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இவர் தங்கி இருந்த ஐந்து நாட்களில் யாரை சந்தித்தார்..? எங்கெல்லாம் சென்றார்..? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாகவும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
0
0