புயலே வீசினாலும் மதிமுகவை அசைக்க முடியாது… வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வைகோ ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 2:07 pm
Quick Share

மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ, பூர்த்தி செய்த வேட்பு மனுவை தேர்தல் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரியகுமார், ஆ.வந்தியதேவன், ஆவடி அந்திரி தாஸ், தாயகம் ருத்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, அவைத் தலைவர் பதவிக்கு அர்ஜுன ராஜ், பொருளாளர் பதவிக்கு செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், ரொஹையா சேக் முகமது, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவிக்கு கிருஷ்ணன், ராணி செல்வின், கே.ஏ.எம்.நிஜான், கழக குமார், ஜெய்சங்கர், சுப்பையா, பூவை பாபு, தணிக்கைக்குழு தலைவர் பதவிக்கு அருணாசலம், பழனிச்சாமி, அருணாசலம், செந்தில்செல்வன், பாசறை பாபு, குணா, பாண்டியன் ஆகியோர் பூர்த்தி செய்த வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இவர்களை எதிர்த்து வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிர்வாகிகளே ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 14-ம் தேதி ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

பின்னர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது ;- மதிமுகவில் எத்தனையோ, புயலோ வீசினாலும் இந்த இயக்கத்தை மன உறுதியுடன் நடத்தி வருகிறோம். என்னுடைய மகன் துரை வைகோ வாக்கெடுப்பு மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுகவில் வாரிசு அரசியல் என்றோ பேச்சுக்கே இடமில்லை. வரும் காலத்திலும் இதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. மதிமுகவில் இளைஞர்கள் அதிகமாக இணைகிறார்கள். இதனால் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மதிமுக பயணிக்கும், என்றார்.

Views: - 333

0

0