மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி விவகாரம்… அதிமுகவினர் போர்க்கொடி : ட்விட்டரில் வார்த்தை போர் நடத்திய இபிஎஸ் VS அமைச்சர் செந்தில் பாலாஜி!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 3:10 pm
Eps Vs SenthilBalaji - Updatenews360
Quick Share

மேட்டுப்பாளையம் மணி நகர் அரசுப்பள்ளியில் அமைய உள்ள அறிவுசார் மையத்தினை இடமாற்றம் செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செந்தில்பாலாஜி வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டமானது நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு தீர்மானமாக மேட்டுப்பாளையம் மணி நகர் அரசுப்பள்ளியில் அறிவுசார் மையம் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு திட்டம் வகுத்து அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மணி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி இனிவரும் காலங்களில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

அதனால் அங்கு அமைய உள்ள அறிவுசார் மையத்தை இடமாற்றம் செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் நேற்று மாலை 5 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் பரபரப்பாக போலீஸ் குவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் போராட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் அரசு திட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்,சில தினங்களில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பூமா உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுக்கு ஆதரவாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மேல்நிலைக்கல்விக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கவுன்சிலர்களின் கோரிக்கையினை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ட்விட் செய்தார்.

எடப்பாடியின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 24 பேரின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் சுயநல நோக்குடன் நடத்தப்படும் சலசலப்பை என்னவென்றே விசாரிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் பதிவிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகன்று என ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Views: - 571

0

0