கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் மாயமான விவகாரம்… தனிப்படையிடம் சிக்கிய நபர்.. விசாரணையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2023, 2:51 pm
30 Lkahs-Updatenews360
Quick Share

கோவை நீலாம்பூர் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை திருடியவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூ.24 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை நீலாம்பூர் பச்சாப்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (51).,ரியர் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 14 ஆம் தேதி தொழில் ரீதியாக கண்ணன் என்பவருக்கு பணம் கொடுக்க தனது காரில் ரூ.30 லட்சம் பணத்துடன், நீலாம்பூர் அன்னபூர்னா உணவகத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் மீண்டும் காரை எடுக்கச் சென்ற போது கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் பின்பக்க கண்ணாடி உடைத்திருந்ததும், உள்ளே இருந்த ரூ.30 லட்சம் மாயமானதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அப்போது சித்ரா, நீலாம்பூர்,நெடுஞ்சாலைகள் என சுமார் 500 சிசிடிவி கேமரா காட்சிகளை 24 மணி நேரத்திலேயே ஆய்வு செய்து, மர்ம நபர் வந்து சென்ற காரை கண்டறிந்தனர்.

இதையடுத்து காரின் உரிமையாளரான செரயாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (33) என்பவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட ராஜேஷ்குமார் ஈரோடு மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் என்பதும், கோவை நீலாப்பூர் அடுத்த செரயாம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கோல்டு விங்ஸ் பகுதியில் உள்ள தனியார் கார் ஷோ ரூமில் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

இவர் பல்வேறு வங்கிகளில் அதிகளவு கடன் வாங்கி வைத்திருந்தும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று தனது ஸ்விப்ட் காரில் வந்த ராஜேஷ்குமார் உணவக கார் பார்கிங்கில் சிசிடிவி கேமராவில் அகப்படாதவாறு உள்ள காரை குறிவைத்து, அதன் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை திருடிக்கொண்டு தப்பியதும், அதில் ரூ.4 லட்சத்தை தனது மனைவியின் வங்கி கணக்கிலும், ரூ.75 ஆயிரத்தை தனது வங்கி கணக்கிலும் போட்டுள்ளார்.

பின்னர் தனது காருக்கு 4 புதிய சக்கரத்தை வாங்கி மாட்டியுள்ளார். போலீசில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் தினமும் வேலைக்குச் சென்று விட்டு, திருடிய பணத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை தினமும் சாப்பிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஷ்குமார் கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்த ரூ.24 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உதவி ஆணையர் பார்த்திபன் கூறும் போது: மறைவான இடங்களில் உள்ள காரை குறி வைத்து, கிடைக்கும் பொருளை திருட முயன்றுள்ளார்.

தகவலறிந்து புகார பெறப்பட்ட 24 மணி நேரத்திலேயே அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்தோம், கார் வண்ணம் கேமராவில் நன்றாக பதியாதவாறு இருந்ததால், பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வீட்டில் பதுங்கியிருந்த அவரை பிடித்துள்ளோம், முக்கிய குடுயிருப்புகள், வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்த வேண்டியது அவசியம், பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறை சார்பில் 2000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிடிபட்ட ராஜேஷ்குமார் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை, குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் தங்கள் காரை நிறுத்தி விட்டு செல்லும் போது, நகைகள் அல்லது பணத்தை காரில் வைத்து செல்ல கூடாது, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 323

0

0