உங்களுக்கு முடி வெட்டினால் நான் இங்கு கடை நடத்த முடியாது ; பட்டியலின சிறுவனுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 6:38 pm
Quick Share

நாமக்கல் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு உள்ளதாக முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த திருமலைபட்டி, காமராஜர் காலணியை சேர்ந்தவர் அருண்பாண்டியன். கடந்த 17ம் தேதி மாலை திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்ற சலூன் கடைக்கு தனது இருமகன்களை முடி திருத்தம் செய்ய அழைத்து சென்று உள்ளார். ஆனால், சலூன் கடையின் உரிமையாளர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும், தான் முடி திருத்தம் செய்தால் இங்கு கடையை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன், முடித்திருத்தம் செய்யச்சொல்லி சலூன் கடை உரிமையாளரிடம் வலியுறுத்தியும், அவர் இறுதி வரை அருண்பாண்டியனின் குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்யவில்லை. இந்த நிலையில், அருண்பாண்டியன் தனது மகனுடன் சலூன் கடைக்காரரிடம் முடித்திருத்தம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து அருண்பாண்டியன் கூறுகையில், “கடந்த 17ம் தேதி திருமலைபட்டியில் உள்ள சீட்டு என்கின்ற சலூன் கடைக்கு சென்று மகன்களுக்கு முடிதிருத்தம் செய்யச்சொல்லி கேட்டபோது, கடைக்காரர் முடிதிருத்தம் செய்ய முடியாது, ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறினார், அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுபோன்ற நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீண்டாமை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பதாக அருண்பாண்டியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Views: - 126

0

0