பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை… செய்தி கேட்டு இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை ; நெல்லையில் அடுத்தடுத்து பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
2 September 2023, 8:45 am
Quick Share

நெல்லையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் நேற்று முன்தினம் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்தனர்.

இருப்பினும், அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு தான் இந்த கொலைக்கு மூல காரணம் என்றும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெகன் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே ,இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அதே மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித் (26) திடீரென வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். பாஜக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் போலீசார் தன்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படும் திமுக பிரமுகர் பிரபுவுடன் தற்போது தற்கொலை செய்து கொண்ட ரஞ்சித் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பிரபு செல்லும் இடங்களுக்கு பெரும்பாலும் ரஞ்சித் அவருடன் சென்று வந்துள்ளார். எனவே, கொலை வழக்கில் போலீசார் நம்மை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அதே போல் கொலையுண்ட ஜெகன் உறவினர்களும், ரஞ்சித்துக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக அவரது உடலை வெளியே எடுத்து வர விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ரஞ்சித் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை வழக்கில் கைதாகலாம் என்ற அச்சத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Views: - 375

0

1