குளக்கரை உடைந்ததால் எடுப்பல் கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர்… வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ; தவிக்கும் பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
19 December 2023, 12:02 pm
Quick Share

நெல்லை மாவட்டம் மூலைக்கரை பட்டியில் குளக்கரை உடைந்ததில் இடுப்பல் கிராமத்தில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நெல்லை மாவட்டத்திலேயே அதிகப்படியான மழை பொழியும் இடமாக விளங்குகிறது. இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் இன்று காலை நிலவரப்படி அங்கு சுமார் 75 சென்டிமீட்டர் மழை பதிவு ஆகியுள்ளது. இதனால் இங்குள்ள தெருக்களில் ஆறு போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

மின்கம்பங்கள் சரிந்து விழுந்தால் பல இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் சாலைகளில் உள்ள தரைப் பாலங்கள் மூழ்கியுள்ளதால் பெரும்பாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பொக்லைன் மற்றும் டிராக்டர் வாகனங்களில் ஏற்றி வந்து அதிலிருந்து சுமந்து எடுத்துச் சென்று, தெருத்தெருவாக வியாபாரிகளும், தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு வினியோகிக்கின்றனர்.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி சுற்றுவட்டார கிராமங்களில் முக்கிய ஊராக இருப்பதால், அத்தியாவசிய பொருட்களை இங்கு வந்து அவர்கள் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் முலைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு வரும் இருசக்கர வாகனங்களில் வெள்ள நீர் புகுந்து நின்று விடுகின்றன.

இதனால் மிகவும் சிரமப்பட்டு மழையில் நனைந்து கொண்டே பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும், தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர்.

மேலும், எடுப்பல் கிராமத்தில் உள்ள எடுப்பல் குளம் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு, பயிர் செய்யப்பட்டுள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. ஏற்கனவே எடுப்பல் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது குளம் உடைந்து உள்ளது.

Views: - 218

0

0