கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை : மனித உரிமை ஆணையத்தை நாட பாதிக்கப்பட்டவர்கள் திட்டம்!!

Author: Babu Lakshmanan
28 March 2023, 9:54 am
Quick Share

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் விசாரணையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட நீதி விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் மகராஜன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்று பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வழக்கறிஞர் மகராஜன்:- அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விசாரணை என்று அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து 14 பேர் வரை பல்லை பிடுங்கி உள்ளார்.

பல்லை பிடுங்கிய நபர்கள் அனைவருமே அப்பாவி பொதுமக்கள். கணவன் மனைவி சண்டை, சிசிடிவி கேமரா உடைத்தவர்கள் என சிறிய சிறிய புகாரில் உள்ளவர்கள் மட்டுமே. ஏஎஸ்பி விசாரணை என்ற பெயரில் ஜட்டி, கிளவுஸ் உடன் வந்து பாதிக்கப்பட்டவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு புகார்களை அரசுக்கு தெரிவித்த நிலையில் சிறிய ஆதரவாக ஏஎஸ்பிஐ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இது போதாது. பொதுமக்களை கொடூரமாக தாக்கிய ஏஎஸ்பிஐ உடனடியாக கைது செய்ய வேண்டும். நீதி விசாரணை அதிகாரிகளிடம் சாட்சி சொல்ல அனைவருமே பயப்படுகிறார்கள். காவல்துறையினர் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணையை நடத்த வேண்டும்.

ஆராய்ச்சியர் அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் இல்லங்களுக்கு காவல்துறை செல்லக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நபர்களின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். சார் ஆட்சியர் தலைமையிலான விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை. ஒரே நிலையிலான (நிர்வாக ரீதியான நிலை) ஒரே பகுதியில் பணி செய்து அதிகாரிகளை வைத்து இந்த சம்பவத்தில் விசாரணை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்ற வேண்டும்.

சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடனடியாக கைப்பற்ற வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்தில் அம்பாசமுத்திரத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளோம். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களை மறைமுகமாக மிரட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எங்களிடம் தெரிவித்தால் அனைவரையும் பாதுகாப்பான முறையில் நாங்கள் விசாரணை குழுவிடம் ஆஜராக செய்கிறோம். பாதிக்கப்பட்ட தரப்பு மக்களிடம் ஆலோசனை நடத்தி வரும் சனிக்கிழமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கண்டித்து அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர், என தெரிவித்தனர்.

Views: - 285

0

0