நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜர் திருநடனக் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 10:00 am
Quick Share

நெல்லை ; நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் அமைந்துள்ள தாமிரசபையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடராஜர் திருத்தாண்டவமாகிய ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கி.பி.,ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடல் பெற்றது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். இங்கு ஆடவல்லானின் ஆருத்ரா தரிசனம் நடக்கும் பஞ்ச சபைகளில் தாமிரசபை அமைந்துள்ளது.

சிறப்பு பெற்ற இத்திருக்கோயிலில் கடந்த 28ம் தேதி அன்று மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்கழி திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தினமும் அதிகாலை திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது.

விழாவின் 10ம் நாளான இன்று தாமிர சபையில் சிவபருமான் நடனக்காட்சியான ஆருத்ரா தரிசனம் அதிகாலையில் நடைபெற்றது. ஸ்ரீ தாமிர சபையில் இன்று நடராஜ பெருமானுக்கு 1.00 மணி அளவில் திருமஞ்சனம், அதிகாலை 3.15 மணிக்கு பசு தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடா்ந்து தாமிர சபையில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் நடராஜருக்கு சிறப்பு நடன தீபாராதனை நடைபெற்றது.

துவாமூா்த்திகள் திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடினா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Views: - 484

0

0