பிரதமர் மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்த ஓபிஎஸ்… பழனி முருகன் கோவிலில் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம்..!!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 9:55 pm
Quick Share

பழனி கோயிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம், பிரதமர் நரேந்திரமோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி துவக்க மனு அளித்துள்ள நிலையில், அதில் நிர்வாகிகள், உறுப்பினர்களை நியமித்து, வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரனுடன் சந்திக்கவுள்ளார்.

மேலும், இந்த கூட்டணி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் இன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அடிவாரத்தில் தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவரை கட்சியின் நகர நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் மாலையில் ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர், சாயரட்சையின் போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தங்கத்தேர் புறப்பாட்டிலும் பங்கேற்றார்.

தங்கத்தேருக்கு அவரது பெயரிலும், பாரத பிரதமர் மோடி பெயரிலும் பணம் செலுத்தி தங்கத்தேர் இழுத்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக அதிமுக கொடி, லெட்டர் பேட், இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்.சுக்கு நீதிமன்றம் மீண்டும் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கேட்டபோது கேள்விக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே ஓபிஎஸ் சென்று விட்டார்.

Views: - 74

0

0