இது குடிக்கற தண்ணீரா? பீஸ் மட்டும் வாங்றீங்க.. கோவையில் தனியார் பல்கலை., விடுதி மாணவர்கள் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2024, 8:30 am
Protest
Quick Share

இது குடிக்கற தண்ணீரா? பீஸ் மட்டும் வாங்றீங்க.. கோவையில் தனியார் பல்கலை., விடுதி மாணவர்கள் போராட்டம்!

கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா நிகர்நிலை பல்கலைகழகத்தில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருப்பதாக கூறி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான எட்டிமடை பகுதியில் அமிர்தா நிகர்நிலை பல்கலைகழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வரும் நிலையில் , மாணவர்களுக்கு தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்து மாணவர்கள் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து நாட்களாக அசுத்தம் நிறைந்த குடிநீர் வழங்கி வருவதாக கூறி நேற்று இரவு முதல் மாணவர்கள் கல்லூரியில் பொருள்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தற்போது வரை நீடித்து வருகின்றது.

விடுதி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அமிர்தா பல்கலை கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதி மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

Views: - 96

0

0