அரசு மருத்துவரை கட்டிப் போட்டு கொள்ளை.. 100 சவரன் நகை, 20 லட்சம் ரொக்கம் திருட்டு… முகமூடி கும்பல் கைவரிசை!!

Author: Babu Lakshmanan
14 April 2023, 10:29 am
Quick Share

பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு 100 பவுன் நகை 20 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மருத்துவர் உதயகுமார். மனைவி மற்றும் ஒரு மகளுடன் வசித்துவரும் உதயகுமாருக்கு, பழனி அண்ணாநகரில் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் உதயக்குமார் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது மகள் மருத்துவ மேல் படிப்பிற்காக சென்னையில் இருப்பதால், மகளை பார்க்க இவரது மனைவியும் சென்னை சென்றதால், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தவரை முகமூடி அணிந்த மூன்று மர்மநபர்கள் எழுப்பியதை அடுத்து, மருத்துவர் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். கூச்சலிட முயன்ற மருத்துவர் உதயகுமாரை தாக்கி, கத்தியால் தாக்கி கட்டிப்போட்டனர்.

மேலும், வீட்டில் வைத்திருந்த 100 பவுன் 20 லட்சம் பணத்தையும் திருடி சென்றனர். கொள்ளையர்கள் சென்றபிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்து, உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர் உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வாங்கி வந்த பழனி நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 303

0

1