பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர்… அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்..!!

Author: Babu Lakshmanan
5 October 2023, 9:55 am
Quick Share

கணியம்பாடியில் சாலை அமைக்க பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த அமிர்தி செல்லும் சாலையில் உள்ள நஞ்சுக்கொண்டாபுரம் கிராமத்திலிருந்து நாகநதி கூட்டுச்சாலை வரும் செல்லும் சுமார் 6 கிலோ மீட்டர் சாலை கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில், அந்த ஊர் பொது மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், மழை காலங்களில் பால் எடுத்து செல்லும் வியாபாரிகள் கீழே விழுந்து பால் கொட்டி வீணாகும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும், மருத்துவ அவசர காலத்தில் விரைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளதால், இதனை சீரமைத்து தரக் கோரி பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று அமிர்தியில் இருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கன்னியப்பன் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்கு கழித்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பழுதடைந்துள்ள சாலை இதுவரை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதனை வருவாய்த்துறை கட்டுப்பாட்டிற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 318

0

0