பெரியார் பல்கலை., பட்டமளிப்பு விழா… பாதியில் வெளியேறிய பாமக எம்எல்ஏக்கள் : அடப்பாவமே காரணமே இதுதானா?!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 4:46 pm
PMK - Updatenews360
Quick Share

பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா தொடங்கி தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். ஏற்கனவே, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.

தற்போது, இந்த விழாவில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் அருள், சதாசிவம் வெளிநடப்பு செய்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக, விழாவுக்கு மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தது. பின்னர், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது.

எங்கும் சர்ச்சை எதிலும் சர்ச்சை என்பதை போல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது.

இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது என்பது பற்றி அதில் கலந்துகொண்டு வெளியேறிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருளிடம் பேசினோம்.

அவர் நம்மிடம் கூறியதாவது, பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பு நேற்றிரவு வரை எனக்கு வரவில்லை. இத்தனைக்கும் எனது மேற்கு தொகுதிக்குள் தான் பல்கலைக்கழகம் இருக்கின்றது.

இன்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டமளிப்பு விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.

எனது தொகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதால் சரி கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்து ஈகோ பார்க்காமல் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றேன். அதேபோல் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவமும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நாங்கள் இருவரும் சென்ற போது, துணைவேந்தர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. வேண்டாத விருந்தாளியாக பார்த்தார்.

இதனிடையே சேலம் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளதால் ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவிக்க விரும்பிய மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் அது குறித்து கேட்டிருக்கிறார்.

அதற்கும் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டாளர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் இனியும் இங்கே இருப்பது மரியாதையற்றது என நினைத்த நான் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன்.

மேட்டூர் தொகுதி பாமக எல்.எல்.ஏ. சதாசிவம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நேரடியாகவே தனது வருத்தத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டார் இவ்வாறு பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.

இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான சர்ச்சைகளும் புகார்களும் இதுவரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 430

0

0