மனைவியுடன் சண்டை… கோபத்துடன் வீடு திரும்பிய உடற்கல்வி ஆசிரியர் தந்தையை வெட்டிக்கொன்ற கொடூரம் ; கயத்தாறில் பயங்கரம்

Author: Babu Lakshmanan
10 November 2023, 4:56 pm
Mom Murder - Updatenews360
Quick Share

கோவில்பட்டி அருகே கயத்தாறில் தந்தையை வெட்டி கொலை செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சுப்பா நாயக்கர் மகன் தசரதன் (வயது 52). இவரது மகன் அஸ்வத் குமார் (வயது 30). இவர் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அஸ்வத் குமாருக்கு திருமணம் ஆகி அருணா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2வது பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது. கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கூட்டுப் பண்ணை கிராமத்தில் அருணா தன்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த மூன்று மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்வத் குமார் தன்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக நேற்று கூட்டுப் பண்ணை கிராமத்துக்கு சென்றுள்ளார். குழந்தைகளை தந்தையிடம் காண்பிக்க தாய் அருணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அஸ்வத் குமார் நேற்று இரவு கடம்பூரில் உள்ள தனது தந்தை தசரதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் காலை மனைவியை சந்திப்பதற்கு கிராமத்துக்கு சென்று குழந்தைகளை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வத் குமாரின் தந்தை தசரதன் கடம்பூரில் இருந்து புறப்பட்டு கூட்டுப்பண்ணை கிராமத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு தந்தை தசரதனுக்கும், மகன் அஸ்வத் குமாருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்படவே, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஸ்வத் குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை தசரதனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தசரதன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் அஸ்வத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தனது தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 307

0

0