பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 4:23 pm
Murder - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது மகன் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணன் கட்டுமான பணி செய்து வருகிறார்.

கிருஷ்ணனுக்கும்,அவரது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என கூறப்படுகிறது . இதனால் கோவிந்தனும் மகன் கிருஷ்ணனும் நீர்வல்லூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று கிருஷ்ணன் வெளியில் சென்றிருந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்துவிட்டு முதியவர் கோவிந்தன் மாலை வீடு திரும்பி உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய கிருஷ்ணன் வீட்டின் கதவினை திறந்து பார்த்தபோது தந்தை எந்தவித அசைவுமின்றி இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனையெடுத்து கிருஷ்ணன் கதறி அழுது கோவிந்தனின் இறப்பு இயற்கை இறப்பாக இருக்கக்கூடும் என எண்ணி இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இதனையெடுத்து செலவிற்க்காக பீரோவிலிருக்கும் பணத்தை எடுக்க முற்பட்ட போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் அதிலிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து சோதனை நடத்தி,தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையெடுத்து சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையெடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணன் வீட்டின் அருகாமையிலிருந்த சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது அதில் முதியவர் கோவிந்தன் பின்புறம் அவரது தம்பி வெங்கடேசனின் மகனான பாட்ஷா என்கிற பாஸ்கர் சென்றது கண்டறியபட்டது.

இதனையெடுத்து சந்தேகமடைந்த காவல்துறையினர் தாமல் பகுதியில் உள்ள பாட்ஷா வீட்டிற்கு சென்று அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் தனது பெரியப்பாவிற்கு மதுபானத்தில் கொக்கு மருந்து கலக்கி கொடுத்து கொலை செய்ததையும், அவரிடம் இருந்த சாவியை எடுத்து சென்று அறையை திறந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

அதனை அடுத்து உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்த இருந்த தங்க நகைகளையும், பணத்தையும் கைப்பற்றி , பாட்ஷா என்ற பாஸ்கரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் பாட்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பப் போவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Views: - 325

0

0