சனாதனத்தை விமர்சிக்கும் உதயநிதி இந்து மதத்தை விட்டு வெளியேறுவாரா..? பொதுமேடையில் விவாதிக்க தயாரா..? கிருஷ்ணசாமி சவால்..!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 8:18 pm
Quick Share

சனாதனம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா..? என்று திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சவால் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் பயணியர் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து போராடி வருகிறோம். மேலும், மதுவிலக்கு துறையில் ரூபாய் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

அந்தப் போராட்டத்தின் விளைவு தமிழகத்தில் 4000 மதுக்கூடங்கள் மூடப்பட்டன. இருப்பினும் தற்போது மூடப்பட்ட மதுக்கூடங்கள் சட்ட விரோதமாக இயங்கி வருகின்றன. மூத்த அமைச்சர்கள் இருக்கும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் இச்செயல்கள் பின்னாளில் சட்டப் பிரச்சனைகளை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமான பார்கள் மட்டுமல்ல, மணல் அள்ளுவது நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆத்தூர் மற்றும் பழனி தொகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. மூத்த அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் இருக்கும் தொகுதிகளில் தான் சட்ட விரோத செயல்கள் அதிகமாக நடக்கின்றது.

இயற்கை வளங்களான மணல், நீர்நிலைகள் ஆகியவற்றை கொள்ளையடிப்பது, 24 மணிநேரம் இயங்கி வரும் மது கூடங்களையும் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்த உள்ளோம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், அதற்கான முதல் கையெழுத்து விடுவோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் செய்ய முடியவில்லை.

தற்போது வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு சனாதனம் என்பதை திமுக கையில் எடுத்துள்ளது. அரசியல் சாசனத்தில் சமுதாய உயர்வு, தாழ்வு பாகுபாடு, மத, மொழி பகுதி வேறுபாடுகள் என குறிப்பிடப்படவில்லை. மதம் என்பது தனிமனித விருப்பு, வெறுப்பு, வழிபாடு, தனி உரிமை அதில் அரசியல் சாசனம் தலையிடாது.

உதயநிதி ஸ்டாலின் கொசுவை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியது எதார்த்தம் அல்ல, திட்டமிட்டு தான் பேசியுள்ளார். சனாதனம் பற்றிய விளக்கம், வரலாறு பாகுபாடு, தீங்கு குறித்து சொல்லாமல் ஒளித்து காட்டுவோம் என்பதுதான் உதயநிதியின் பேச்சு.

எதற்கு சுற்றி வளைத்து பேசுவது நேரடியாக இந்துக்களை ஒழிப்போம். தமிழகம், இந்தியா, உலகத்தில் வாழும் இந்துக்களை ஒளித்து கட்டுவோம் என சொல்ல வேண்டியது தானே. இந்துக்களை ஒழிப்பதற்கு எந்த விதமான ஆயுதத்தை எடுத்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை.

சாதி மத வேறுபாடுகளை ஏற்க மாட்டோம் என என சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, வகுப்புவாத பேச்சுகளை பேசுவது சரியானது அல்ல. சாதிகளை ஒழிப்பது அவர்களது நோக்கமல்ல. முழுவதும் களவாணித்தனம் தான். தைரியம் இருந்தால் சனாதனம், வாரணாசிரம் மக்களை வேறுபடுத்துகிறது எனக்கூறி தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி இந்துக்களில் இருந்து வெளியேறுகிறார்களா? நாங்கள் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்றால், நீங்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

சனாதனத்தில் மனிதனை வேறுபடுத்தி காட்டுவது என எந்த ஆதாரத்தை வைத்து பேசுகிறார். பொது மேடையில் சனாதனம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விவாதிக்க தயாரா? விவாதத்தில் தோற்றுவிட்டால் ஆட்சியை கலைக்க தயாரா..? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Views: - 295

0

0