‘மெழுகாக உருகி தருவாளே ஒளியை..’ இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாத தாய் குரங்கு ; நெஞ்சை கலங்க வைக்கும் காட்சி!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 6:34 pm
Quick Share

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இறந்து போன குட்டியை பிரிய மனமில்லாமல் சுமந்து செல்லும் தாய் குரங்கின் செயல் பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும்பாலும் நீர் மற்றும் உணவுக்காக தினந்தோறும் சுற்றி வருவது வழக்கமாகும்.

இந்த கூட்டத்தில் உள்ள ஒரு ஆண் குரங்கின் இடது பின்னங்காலில் இரும்பு கம்பி சிக்கி கால் இரத்த ஓட்டம் இல்லாமல் கால் அழுகிய நிலையிலும், மேலும் இதே கூட்டத்தில் ஒரு தாய் குரங்கு சுமந்து சென்ற குட்டி இடுப்பு மற்றும் இடது கண் கலங்கிய நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குட்டி தரையில் தேய்ந்தபடி தூக்கி வலம் வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் அதனை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் சென்றனர்.

இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குட்டி இன்று இறந்து போய் துர்நாற்றம் வீசும் நிலையில், அதனை சுற்றி ஈக்கள் மொய்த்த படியும், குட்டியை பிரிய மனமில்லா தாய் குரங்கு, இறந்து போன குட்டியை சுமந்து கொண்டும், அதன் மீது மொய்க்கும் ஈக்களை ஓட்டிய படியும் சுமந்து செல்லுவது பார்ப்பவர்கள் மனதில் நெருடலை உருவாக்கி உள்ளது.

மேலும், குட்டியை சுமந்தபடி அலையும் தாய் குரங்கை பிடித்து அதனிடமுள்ள இறந்த குட்டியின் உடலை அப்புறப்படுத்தவும், அதே கூட்டத்தில் கால் அழுகிய நிலையிலுள்ள, ஆண் குரங்கின் உயிரை காப்பாற்றவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Views: - 217

1

0