புரெவி புயல் எதிரொலி : குமரியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு!!
1 December 2020, 1:34 pmபுரெவி புயல் எதிரொலி காரணமாக 20 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தயார் நிலையில் உள்ளனர்.
வங்க கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து புரெவி புயல் மீட்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையை சேர்ந்த 20 பேர் கொண்ட 2 குழு கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தது. நவீன மீட்பு படகுகள் மற்றும் உபகரணங்களுடன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி உள்ள தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் 19 குழுவினரும், கேரளாவில் 2 குழுவினரும் உள்ள நிலையில், தேவைக்கு ஏற்ப கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதல் குழுவினர் வருவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
அதேவேளையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல்பகுதியில் சூறாவளி காற்று வீசிவருவதால் சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடிதுறைமுகத்தில் விசைபடகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், மணக்குடி போன்ற கடலோர பகுதிகளில் மீனவர்கள் நாட்டுபடகு, வள்ளம் மற்றும் மீன்பிடி வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்புக் கருதி மேடான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால், மீன்பிடி துறைமுகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் ஒதுக்கிய நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
0
0