குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலையில் திடீர் திருப்பம்… ரயிலில் தலை வைத்து ஆண் காவலர் தற்கொலை ; விசாரணையில் பகீர்..!

Author: Babu Lakshmanan
22 September 2023, 4:15 pm
Quick Share

இரு குழந்தைகளுடன் பெண் காவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, மதுரையில் ஆண் தலைமை காவலரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (40), இவரது மனைவி ஜெயலட்சுமி (37) இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி பவித்ரா (11), காளிமுத்து (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமிக்கு திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது மகள் பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு பிள்ளைகளுடன், நேற்று மாலை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் பகுதியில் மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரயில் மோதிய வேகத்தில் 3 பேரின் உடல்களும் துண்டு துண்டாக சிதறியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீசார் இறந்த 3 பேர்களின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும், அதே சமயம் அங்கு பணியாற்றிய தலைமை காவலர் கோவில்பட்டியை சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (50) என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இருவரும் நெருக்கமாக பழகி வந்த விவகாரம் கணவர் சுப்புராஜுக்கு தெரிய வரவே, அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் ஏற்கனவே உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருந்து வந்த நிலையில், சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி, இவரது மனைவியும் தகராறில் ஈடுபட்டு, விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன், ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.

இந்த நிலையில், சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி, சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில், நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில், இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சொக்கலிங்க பாண்டியன் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததில், இருவருக்குமான திருமணத்தை மீறிய உறவு அப்பகுதி முழுவதும் தெரியவர, கணவனை பிரிந்தும், தனது ஆண் நண்பர் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி, இனி இந்த உலகத்தில் வாழ கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு, நேற்று மாலை ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து, இன்று அதிகாலை கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி பகுதிக்கு சென்று, அங்கு சென்னை – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது, தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனைப் பிரிந்தும், கள்ளக்காதலனும் ஏமாற்றிய நிலையில், தனது 2 குழந்தைகளுடன் மதுரை ரயில்வே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அறிந்து, அவரது ஆண் நண்பரான ரயில்வே தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனும் நேற்று இரவு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இரு காவலருக்கிடையே ஏற்பட்ட முறை தவறிய நட்புக்கு ஏதும் அறியாத 2 அப்பாவி குழந்தைகளும் பலியாகிய சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 513

0

0