நிபந்தனைகளுக்கு தயார்.. ஜாமீன் மட்டும் கொடுங்க : நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி வாதம்.. நீதிபதி போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 6:31 pm
senthil-balaji-updatenews360
Quick Share

நிபந்தனைகளுக்கு தயார்.. ஜாமீன் மட்டும் கொடுங்க : நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி வாதம்.. நீதிபதி போட்ட உத்தரவு!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட பிறகு அமலாக்கத்துறை, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவலும் தொடர்ந்து 22வது முறையாக மார்ச் மாதம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சமீபத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனிடையே, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும் திருத்தம் செய்யவில்லை எனவும் அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.

முறைகேடுகள் முகாந்திரம் இல்லாமல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு தயார், ஆனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார். இதனால், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

Views: - 230

0

0