மேற்கூரையை பிடித்து தொங்கியவாறு ஆபத்தான பயணம் ; உயிரை கையில் பிடித்தபடி மாணவர்களின் பேருந்து பயணம் ; இதுக்கு யார் முழுபொறுப்பு..?

Author: Babu Lakshmanan
6 October 2023, 5:03 pm
Quick Share

விருத்தாசலம் அருகே பேருந்தில் போதிய இடம் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் படிக்கட்டு மற்றும் பேருந்தின் வெளிபுறத்தில் உள்ள மேற்கூரையை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆலடி, புலியூர், கூ.கள்ளக்குறிச்சி, நைனாகுப்பம், ஆரிநத்தம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் படித்து வருகின்றனர்.
மேலும், நூற்றுக்கணக்கானோர் உளுந்தூர்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் அதிக அளவில் மாணவர்கள் சென்று வருகின்றனர். குறைந்த அளவிலான பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாத மகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை விருத்தாசலத்தில் இருந்து ஆறடி கிராமம் வழியாக உளுந்தூர்பேட்டைக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேருந்துகளில் பயணம் செய்தனர். போதிய இடவசதி இல்லாததால் மாணவர்கள் பேருந்தின் படிகளில் தொங்கியும், பேருந்தின் வெளிப்புறத்தில் உள்ள மேற்கூரையை பிடித்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்ய மாணவர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 290

0

0