பள்ளியில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் உயிரிழப்பு ; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 4:44 pm
Quick Share

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணகுமார். இவருக்கு நதியா என்ற மனைவியும், மூன்று மகள்களும் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோபி என்ற மகனும் உள்ளனர். சிலுக்குவார் பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் மகன் கோபி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி பள்ளிக்கு வந்த கோபி, பள்ளிக்குள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை நிலக்கோட்டை பகுதியுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மாணவனின் பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனர்.

மருத்துவமனைக்குச் சென்ற மாணவனின் பெற்றோர் மாணவனின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து பின்பு, மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் கோபி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் விவசாயத்திற்காக பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்ததாகவும், அதேபோல் பள்ளியில் மதிப்பெண் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவனின் இறப்பு குறித்து காவல்துறையினர் முழு விசாரணை நடத்திய பின்பே மாணவன் எதற்காக உயிரிழந்தார் என்பது தெரியவரும். அதேபோல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷம் அருந்தி உயிரிழந்தது நிலக்கோட்டை பகுதி முழுவதும் தற்போது பள்ளி மாணவர்கள் இடையே மட்டுமல்ல பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 326

0

0