பேரு ‘கலத்தூர் தட்சினா மூர்த்தி’… குணம் ‘கடித்து வைத்தல்’… அதிகரித்த தெருநாய்கள் தொல்லை… போஸ்டர் ஒட்டி கலாய்த்த சமூக ஆர்வலர்..!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 5:01 pm
Quick Share

நெல்லை ; தெருநாய்களை கட்டுப்படுத்த தவறிய நெல்லை மாநகராட்சியை கலாய்த்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

செல்லப் பிராணிகள் மனிதனின் வாழ்வியலோடு ஒன்றிய உயிரினங்கள் என்பதால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல், கிளி போன்றவற்றை வளர்த்து வருவார்கள். ஆனால் அதே செல்லப் பிராணிகள் மனித உயிர்களுக்கு சில நேரங்களில் தீங்கு விளைவிப்பதாக மாறிவிடுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் சில நேரங்களில் வெறிப்பிடித்து மனிதர்களை கொலை வெறியோடு தாக்குவதால் பலர் நாய் கடிபட்டு பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, சாலைகள், தெருக்களில் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மேலப்பாளையம், டவுன், பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி சார்பில் அவ்வப்போது பெயரளவுக்கு மட்டும் நாய் பிடிக்கும் வன்டியை வைத்து தெரு நாய்களை பிடித்து சொல்கின்றனர். மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாததால் வெறி நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி 36வது வார்டில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தாத மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் நகைச்சுவையாக சுவரொட்டி ஒன்றை அப்பகுதியில் ஒட்டியுள்ளார்.

அதில் 36வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு குழுவின் உறுப்பினர்கள் என்ற தலைப்பை சூட்டி நையான்டியோடு என்ட் கார்டு போட்டுள்ளார் அதன் கீழ் வரிசையாக நாய்களின் புகைப்படங்களோடு அவற்றின் பெயர், வயது, குணம் மற்றும் அந்த நாய்களால் கடிப்பட்டவர்களின் எண்ணிக்கையை கற்பனையோடு பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக புண்ணியமூர்த்தி, களத்தூர், தட்சிணாமூர்த்தி, வழுவக்குடி, சுந்தரமூர்த்தி, மேலக்குடி, ராமமூர்த்தி என்று நாய்களுக்கு கலக்கலான பெயர்களை சூட்டியுள்ளார். மேலும், அதன் குணங்களாக சண்டை இடுதல், கடித்து வைத்தல், ஆண்களை மட்டும் குறி வைத்து விரட்டுதல், சங்கத் தலைவனாக பாவித்தல், பதுங்கி இருந்து விரட்டுதல் என குறிப்பிட்டு கடிபட்டவர்கள் எண்ணிக்கையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

சமூக ஆர்வலர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அப்பகுதியை கடந்து செல்லும் மக்களிடம் ஒருவகையில் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும், நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் ஒருவித நூதன போராட்டமாகவே இச்சம்பவம் பார்க்கப்படுகிறது.

Views: - 325

0

0