கால்நடைகளை அலற வைக்கும் வினோத எறும்புகள் : கண்களை மட்டும் கவ்வும் மர்மம்… வீடுகளை காலி செய்யும் மலை கிராம மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 5:24 pm
Mystery Ant - Updatenews360
Quick Share

நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பல 100 சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ள வனவிலங்குகளை கொள்ளும் வினோத எறும்புகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை வனப்பகுதியில் பல 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியை சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவியிருந்தது. இது நாளாடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவியது. தற்போது கடந்த சில நாட்களாக அது சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த வினோத வகை எறும்புகள் வனப்பகுதிக்கு சென்றவுடன் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இந்த எறும்புகள் கண்களை மட்டுமே கடிப்பதாக கூறப்படுகிறது. இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது.

இதனால் வனப்பகுதியில் உள்ள பாம்பு, முயல், போன்ற வனவிலங்குகள் அனைத்தும் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் காட்டுமாடு போன்ற பெரிய வனவிலங்குகளையும், கன்றுகளையும் இந்த எறும்புகளின் தாக்குதலுக்கு உள்ளானதால் அப்பகுதியில் இருந்து சென்று விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர் .

விவசாயிகளின் ஆடு, மாடு போன்ற கன்றுகளில் கண்களை தின்று விடுகிறது. இதனால் எறும்புகள் பரவி உள்ள விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்கின்றனர்.

இதனால் மலைப்பகுதி முழுவதும் மல மல என பரவி வன விலங்குகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளையும் கொள்ளும் இந்த வினோத எறும்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று , கிராம மக்கள் தங்கள் கதறலை தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இது புதுவகையான எறும்பாக உள்ளது. இது போன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை. இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால் பாம்பு , முயல் போன்ற வன உயிரினங்கள் இறந்து விடுகிறது. என்றார் .

Views: - 515

0

0