அடுத்தடுத்து நாய்கள் கொன்று புதைப்பு… அலறிய சங்ரலிங்கபுரம் மக்கள் ; கணவருடன் ப்ளூ கிராஸிடம் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி..!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 2:48 pm
Quick Share

விருதுநகர் ; விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று குவித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் நாய்களை தலையில் அடித்தும், சுருக்கு கம்பி போட்டு பிடித்தும், நாய்களை கொன்று வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதியின் அருகே உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்து, ப்ளு கிராஸ் அமைப்பை சேர்ந்த சுனிதா சங்கரலிங்கபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் கொல்லப்படுவதாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இப்புகார் மனுவின் அடிப்படையில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட பொழுது, சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை அப்பகுதி ஊராட்சிமன்ற, தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, சில கைக்கூலி நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை தலையில் அடித்தும், சுருக்கு கம்பி வளை வைத்து பிடித்து, கொன்று குவித்து புதைத்தது தெரிய வந்துள்ளது.

ஒரு நாயினை கொன்று புதைப்பதற்கு 200 முதல் 300 ரூபாய் வரையும் கூலி தருவதாகவும், ஊராட்சி மன்றத் தலைவர் கூறியதையடுத்து இரண்டு, மூன்று தினங்களாக கொன்று குவித்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும், கொன்று குவித்த நாய்கள் குறித்து அப்பகுதியில் காவல்துறையினர் சோதனை இட்டு விசாரணை செய்ததில், சங்கரலிங்கபுரம் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் முப்பதுக்கும், மேற்பட்ட நாய்களை கொன்று குவித்து புதைத்து வைத்த இடத்தை கண்டறிந்தனர்.

பின்னர், காவல்துறை உதவியுடன், அரசு கால்நடைதுறை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட நாய்களை தோண்டி எடுத்து அதனை பிரத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.

இது குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நாய்களை கொன்று குவித்தது காண்போரை கண்ணீர் வர வைத்ததாகவும், அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாய்களை தலையில் அடித்து கொன்றதும் மட்டும் அல்லாமல், ஒரு சில நாய்கள் நிறைமாத கற்பிணியாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நாய்கள் தொல்லை அதிகரித்தாலோ அல்லது வெறி நாய்கடி இருந்தாலோ அருகில் உள்ள கால்நடைதுறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் சங்கரலிங்கபுரம் ஊராட்சி தலைவர் அது பற்றி ஏதும் கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்காமல் நாய்களை கொன்று குவித்ததாக சங்கரலிங்கபுரம் கால்நடைதுறை தெரிவித்தனர்.

Views: - 466

0

0